பிரேசில் நாட்டில் சவப்பெட்டிக்குள் போதைப்பொருளை காரில் கடத்தி சென்றவர் கைது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் காரணமாக பிரேசில் நாடு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது வரை அந்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக, 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அங்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் சராசரியாக ஆயிரம் பேர் வரை அங்கு கொரோனா காரணமாக உயிரிழக்கின்றனர். இந்நிலையில், பிரேசிலின் மடோ க்ராஹோ டி சுலா மாகாணத்தின் பொன்டா போரா என்ற பகுதியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை மறித்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் தனியார் அமைப்பில் வேலை செய்து வருவதாக அந்த கார் டிரைவர் கூறினார். அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விவரங்களை காட்டும்படியும் போலீசார் கேட்டபோது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த 2 சவப்பெட்டிகளை சோதனை செய்தனர்.

அதில், சுமார் 290 கிலோ அளவுக்கு போதை பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் அந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். கொரோனா காலத்தில் சவப்பெட்டிக்குள் போதை பொருள் கடத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.