தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயம்

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி வைத்தார்.

தனி மாவட்டம் வேண்டும் என்று கால் நூற்றாண்டு காலமாக கண்ட கனவு நனவானதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகியுள்ளது.