சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்!

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் மெட்ரோ ரெயில்களை இயக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து பயணிகளை பாதுகாப்பாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7ம் தேதி முதல் சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் 5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.