தென்மேற்கு பருவமழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,160 கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 5,938 கனஅடியாக குறைந்தது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஒரு கட்டத்தில், வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது. பின்னர் மழை குறைந்ததையடுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,160 கனஅடியில் இருந்து 5,938 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 97.62 அடியாகவும், நீர்இருப்பு 61.80 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 18,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 600 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை விட தற்போது நீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.