மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அளவு வினாடிக்கு 26,102 கனஅடியிலிருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 64.71 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர்வரத்து எதிரொலியாக நடப்பாண்டில் 2வது முறையாகவும், அணை வரலாற்றில் 66வது முறையாகவும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.