திரைப்பட விருதுகள் விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் நீட்டிப்பு; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளுக்கு தகுதியுடைய சிறந்த தமிழ் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் 25.2.2020 முதல் பெறப்பட்டு வந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.3.2020 மாலை 5 மணிவரை பெறப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 24.3.2020 முதல் ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் குறித்த காலத்திற்குள் திரைப்பட விருதுகள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க இயலவில்லை.

இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்ற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் விண்ணப்பங்கள் பெறப்படும் நாளை 29.10.2020 அன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.