நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 1982-ம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.

தற்போது அந்த கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து கொண்டு வருகின்றனர். இந்த கல்லூரியானது 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்காக ஆய்வு செய்யத் தான் தற்போது வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் பின் தொடர்ந்து பேசிய அவர் இங்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும் என தெரிவித்தார். அந்தப் பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.