பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அவசர ஆலோசனை

பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அவசர ஆலோசனை... பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து, முதன்மைக்கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(அக்.,6) அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச்சில் நடத்தப்படும். இந்த ஆண்டு, ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாடத் திட்டத்தை குறைப்பது, பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது மற்றும் பொதுத்தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்துகிறார் .சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

காலை, 10:30 முதல், மாலை வரை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நாகராஜ முருகன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன், உஷாராணி, குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.