காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு... போலீஸ் விசாரணை

மதுரை: காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு... மதுரையில் 20 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. தையல் தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் கனிஷ்கா(9), இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி காளிமுத்துவும், மகள் கனிஷ்காவும் திடீரென மாயமாகியுள்ளனர்.இதனால் இருவரையும் பிரியதர்ஷினி தேடியுள்ளார்.இருவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி பரணில் ஏறி பார்த்தபோது அங்கு துணிமூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் இருந்த வாளிக்குள் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி கனிஷ்காவின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இது தொடர்பான தகவலின் பெயரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டனர். மேலும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் காளிமுத்து அடிக்கடி சந்தேகம் அடைந்து பிரியதர்ஷினியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சிறுமி மாயமான தினத்தன்று அவரும் தலைமறைவானதால் சிறுமியை அவரே கொலை செய்து விட்டு தப்பிச்சென்றாரா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் காளிமுத்துவை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.