விஜயவாடா ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினற்கு மோடி, அமித் ஷா, ஜெகன் மோகன் இரங்கல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஓட்டலில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொகுசு ஓட்டலில் 3வது மாடியில் கொரோனா வைரஸ் சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பினர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால், மீட்கும் பணியில் காவல்துறை, மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சொகுசு ஓட்டலில் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் பல பகுதியில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.