இருசக்கர வாகனம் மோதி விபத்து - கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன் பெண் பலி

திருமங்கலம் அனுமார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கார்த்திகாதேவி (வயது 23). இவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது.

ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த சுருளிராஜன் என்பவர் விருதுநகரில் இருந்து மதுரை அழகர்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் வந்தபோது திடீரென்று நிலைதடுமாறி 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் 2 பெண் குழந்தைகள் உள்பட 5 பேருமே கீழே விழுந்தனர்.

இந்த சமயத்தில் கப்பலூரில் இருந்து வந்த டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகா தேவி மீது மோதியது. இதில் அவர் கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரிதாபமாக இறந்து போனார். மீதி 4 பேரும் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.