கன்னியாகுமரியில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க எம்.பி. விஜய் வசந்த் வலியுறுத்தல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங்கள் கட்ட வேண்டியது ஒரு முக்கியமான தேவையாகும் என்று எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தியக்கூறுகள் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங்கள் கட்ட வேண்டியது ஒரு முக்கியமான தேவையாகும்.மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பி வழியும் மாவட்டம். கடலாலும் மலையாலும் சூழ்ந்துள்ள நிலப்பரப்பு ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது. கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது இந்த மாவட்டம். அதுமட்டுமின்றி உலகப் புகழ்வாய்ந்த கோவில்கள் ஆலயங்கள் மற்றும் மசூதிகள் நிறைந்த இந்த மாவட்டம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தியக்கூறு உள்ளன.

ஆனால் போதிய அளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு எந்த தடையும் இன்றி சென்றுவர சாலை வசதிகள் மிக முக்கியமான ஒன்றாக தேவைப்படுகிறது.

மேலும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங்கள் கட்ட வேண்டியது ஒரு முக்கியமான தேவையாகும். அதுபோன்று தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதும் சுற்றுலாவுக்கு இன்றியமையாத ஒன்றாகும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிரதேசங்களில் சாகச விளையாட்டுக்கள் ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை கவர இயலும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா சிறந்து விளங்க மிக முக்கியமான தேவை ரயில் மற்றும் விமான சேவை. பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்வதற்கான ரயில் வசதிகள் குறைவாகவே உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ரயில் வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்று நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்ததற்கு ஏற்ப கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவும்.

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தையும் இணைத்து இங்கு சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கு தேவையானவற்றை சுற்றுலாத்துறை செய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் விமான நிலையம் அமைக்கவும் அந்தந்து துறைகளுக்கு சுற்றுலா துறையின் மூலமாக பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.