சென்னை: வருகிற 12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றன எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கு இடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது .
மேலும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.