நாட்டுக் கோழி வளர்க்க விரும்புபவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கலெக்டரின் அறிவிப்பு... நாட்டுக் கோழி வளர்க்க விரும்புவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; சேலம் மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தில் நடப்பாண்டில் 50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. அதில் முன் அனுபவம் உள்ள விவசாயிகள் மற்றும் கோழி வளர்க்க விருப்பமுள்ளவர்கள் ஆயிரம் கோழி குஞ்சுகள் வளர்க்க, தேவையான கூண்டு தேவை.

இடம், தீவனம், தண்ணீர் வசதி சொந்தமாக இருக்க வேண்டும். தேர்வாகும் பயனாளிகளுக்கு கட்டாயம் அந்த கிராமத்தில் சொந்த வீடு தேவை. விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படும். அதிலும் குறிப்பாக 2012 முதல் 2017 வரையில் கால்நடை வளர்ப்புத் திட்டத்தில் பயன் பெற்று இருக்கக் கூடாது. மேலும் 20 ஊராட்சிகளில் 5 முதல் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.

மேலும் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பயன்பெற, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.