தஞ்சாவூர் அருகே லோடுவேன் மோதி முதியவர் பலி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லவன்பட்டினம் அருகே மீன் ஏற்றி சென்ற லோடு வேன் மோதி பைக்கில் சென்ற முதியவர் பலியானார். அவரது மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முதுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் (65) விவசாயி. இவரது மனைவி செல்வி (60). இருவரும் உறவினர் வீட்டு விழாவுக்காக மணமேல்குடிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வல்லவன் பட்டினம் அருகே மீன் ஏற்றி சென்ற லோடு வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.