பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ,போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி இன்று (வியாழக்கிழமை) நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜாமுத்தையா சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை அடுத்து தேவை ஏற்பட்டால், டிமலஸ் சாலை சந்திப்பில் இருந்து ராஜாமுத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோன்று ஈ.வெ.கி.சம்பத் சாலை, ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து, ராஜாமுத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது.

மேலும் வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர்பால சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கி செல்ல முடியாது. பிராட்வேயில் இருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள், குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும்.

வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்களது வழித்தடங்களை வாகன ஓட்டிகள் அடையலாம். சென்டிரல் ரெயில் நிலையம் வரும் பொதுமக்கள் தங்களது பயண திட்டத்தை முன் கூட்டியே வகுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை சிறப்பு காவல் படை 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.