மியான்மரில் படகு ஆற்றில் கவிழ்ந்து ஒருவர் பலி; 6 பேர் மாயம்

படகு ஆற்றில் மூழ்கியது... மியான்மரில் இருந்து 27 பேருடன் சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற படகு ஒன்று மீகாங் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் மாயமாகியுள்ளனர்.

சீனாவில் உருவாகும் லங்காங் நதி என்று அழைக்கப்படும் மீகாங் நதி மியான்மருக்குள் நுழைவதற்கு முன்பு திபெத் மற்றும் யுன்னான் மாகாணம் வழியாக ஓடி தென்கிழக்கு ஆசியா வழியாக கடலுக்குச் செல்கிறது.

இந்த ஆற்றில் நேற்று மியான்மரை சேர்ந்த படகு ஒன்று சுமார் 27 பயனிகளுடன் சீனாவின் யுன்னான் மாகாணத்தை நோக்கிச் சென்றுள்ளது. சரியாக இன்று அதிகாலை 4 மணியளவில் படகு திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த யுன்னான் மாகாண மீட்பு படை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 17 பயணிகளை மீட்டுள்ளனர். மேலும் ஒரு பயணியின் உடல் மியான்மர் நாட்டின் எல்லையில் காணப்பட்டதாகவும் 6 பேர் மாயமாகியுள்ளதாகவும் அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.