கொரோனாவுக்கு திருப்பூரில் ஒருவர் பலி

திருப்பூர்: கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.இதனை அடுத்து இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டதில் இது வரை மட்டும் 18பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளைம் நேரு நகர் சேர்ந்த சரசு (எ) சரஸ்வதி 62 வயது மூதாட்டி ஒருவர், கடந்த மாதம் 23-ம் தேதி பக்க வாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(82) என்பவர் கொரோனா பாதித்து இறந்தார். எனவே இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே இறந்த மூதாட்டி உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுகாதாரதுறையினர் சார்பில் அனுப்பர்பாளைம் நேரு நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணி வருகின்றனர்.