ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மின்சார ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே

சென்னையில் பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுமக்கள் அனைவரும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பயணிக்க நேற்று முன்தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கான 410 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. ஆனால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான ரயில் சேவையை விட குறைவான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால், சென்னையில் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.