கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை ஒருமுறை பார்க்க வாய்ப்பு - சுகாதாரத்துறை மந்திரி

கேரள மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 48,212 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் அங்கு மொத்த பரிசோதனை எண்ணிக்கை 43 லட்சத்து 28 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். அதில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 910 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 2 லட்சத்து 82 ஆயிரத்து 568 பேர் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர்.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6,845 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 96,585 பேர் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா காரணமாக மரணமடைந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா கூறுகையில், கொரோனா நோய் பரவலை தடுக்க அனைவரும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடக்கம் மற்றும் தகனம் செய்யும்போது ஊழியர்கள் இறந்தவர்களின் முகத்தை மட்டும் நெருங்கிய உறவினர்களிடம் திறந்து காட்டுவார்கள். ஆனால் உடல்களை மிக அருகில் நின்று பார்க்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், குறிப்பிட்ட இடைவெளி விட்டு மதம் சார்ந்த சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். எந்த காரணம் கொண்டும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்டவர்கள், நோயாளிகள் கொரோனா பாதித்தவர்கள் அருகில் செல்லவே கூடாது என்று கூறியுள்ளார்.