ஊரடங்கு காலத்தில் நொறுக்குத்தீனிகளை அதிகம் எடுத்துக் கொண்ட மக்கள்; ஆய்வில் தகவல்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நொறுக்குத் தீனிகளை அதிகளவில் எடுத்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

கனடாவில் ஊரடங்கு நேரத்தில் ஆரோக்கியத்திற்கு எதிரான நொறுக்குத் தீனிகளை அதிகளவில் மக்கள் உணவாக எடுத்து கொள்வதால், இது மது மற்றும் புகைப்பழக்கத்தின் வழக்கத்தை விட அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்காக, கனடாவில் 75 நாட்களாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கிக் கிடப்பதால், அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.



பொழுதுபோக்குக்கு உண்ணும் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகள் மற்றும் மது, புகைப்பழக்கம். இவை யாவும் வழக்கத்தைவிட இந்த ஊரடங்கில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கனடா அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி தெரசா டாம், நாட்டு மக்களை ஆரோக்கியமான உணவுத் தேர்வுக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில், ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இது குறித்து, ஸ்டேட்கான் என்ற அமைப்பு, புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 3-ஆம் திகதிக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும்போது, ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகளை உண்பவர்கள் இப்போது 35 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது மது, புகைப் பழக்கத்துக்கும் பொருந்தும். ஐந்து கனடா மக்களில் ஒருவர் என்ற விகிதத்தில் அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், புகைப்பழக்கம் 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரசா டாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில், தற்போது வரை கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிப்படைந்திருப்பதும், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.