திற்பரப்பு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் திற்பரப்பு அருவிக்கும் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில் வருகிற 14-ம் தேதி முதல் திற்பரப்பு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார். இதனையொட்டி திற்பரப்பு அருவியையொட்டி உள்ள பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுவர்கள் விளையாடும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பூங்காவில் செடிகளை அழகுபடுத்துதல், நீச்சல்குளத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் நடந்தது. இதனால் ஒன்பது மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவி புதுப்பொலிவுடன் செயல்பட இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் திற்பரப்பு அருவியில் குளிக்க உற்சாகமாக உள்ளனர். மேலும் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒன்பது மாதமாக வருமானம் இன்றி தவித்து வந்தோம், மீண்டும் கடை திறக்கப்படுவதால் எங்களுடைய குடும்பத்தை சிரமமின்றி நடத்தலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .