புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து பொது நல மனுத்தாக்கல்

புதுடில்லி: பொது நல மனுதாக்கல்... ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா் திறந்து வைக்கும் வகையில், மக்களவைச் செயலகத்துக்கும் மத்திய அரசுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘நாட்டின் முதல் குடிமகன் என்பதுடன் நாடாளுமன்ற அமைப்புமுறையின் தலைவா் என்பதால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிப்பாா் என்று குறிப்பிட்டு, மக்களவைச் செயலகம் கடந்த 18-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெய சுகின் என்ற வழக்குரைஞா் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 79-ஆவது பிரிவின்படி, நாடாளுமன்றமானது குடியரசுத் தலைவரையும், இரு அவைகளையும் (மக்களவை, மாநிலங்களவை) உள்ளடக்கியதாகும். மேலும், குடியரசுத் தலைவா், நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாவாா்.

ஒவ்வொரு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றி, அவை கூட்டப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 87-ஆவது பிரிவு கூறுகிறது. அத்தகைய உயரிய முக்கியத்துவம் வாய்ந்த குடியரசுத் தலைவரை அவமதிக்க மக்களவைச் செயலகமும் மத்திய அரசும் முயல்கின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவா்தான்; நாடாளுமன்ற அமைப்புமுறையின் தலைவரும் அவரே. எனவே, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டும்.

இதுதொடா்பாக, மக்களவைச் செயலகத்துக்கும் மத்திய அரசுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை காக்க, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.