ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி? கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன

புதுடில்லி: ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி? 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதிலும் குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது தொடர்ச்சியாக தமிழ்நாட்டிச் சேர்ந்த நபர்களை பாராட்டி வருகிறார். அண்மையில் பாப்புவா நியூ கினியா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்று அந்த நாட்டின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார்.

திருக்குறளின் சிறப்பையும், அது உணர்த்தும் அறத்தையும் உலகில் வேறு எங்கும் காண முடியாது என்று பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர், இந்தியர்களுக்கான மொழி தமிழ் என கூறினார்.

இது தவிர, புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த, 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டு இருந்தன. 1947 ஆம் ஆண்டு நேருவுக்கு வழங்கப்பட்ட சோழர் காலச் செங்கோலையும் தமிழகத்தைக் குறிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார்.

பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழுகுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், 2024 நாடாளுமனற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக உலா வரும் செய்திகள் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு கடந்த ஆண்டு இறுதியில் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வும் முக்கிய காரணமாக அமைகிறது.

தமிழக பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, தமிழகத்தில் பிரதமர் போட்டியிட உள்ளதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுதவிர தமிழ் மீதும் தமிழர் மீதும் பிரதமர் மிகுந்த அன்பு கொண்டவர் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகிறார்.

இருந்த போதிலும் தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.