ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

கொச்சி: விக்ராந்த் போர்க்கப்பல் குறித்து பிரதமர் பெருமிதம்... இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் பதிலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய கடற்படைக்கு பெருமை மிகு வரலாறு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை. இது இந்தியர்களின் பெருமை. இந்தியர்களின் திறமை, மன உறுதிக்கு உதாரணமாக இந்த கப்பல் உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் பதிலாக கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது. கேரள கடற்கரையில் இருந்து இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு விடியல் பிறந்துள்ளது.

தற்சார்பு பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

விமானந்தாங்கி கப்பலை சொந்தமாக தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. வடிவமைப்பிலும், திறனிலும் இந்த போர்க்கப்பல் ஒரு மிதக்கும் நகரம். இந்த கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்திய கடற்படையில் மிச்சமிருந்த காலனி ஆட்சியின் குறியீட்டை இன்று அகற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.