பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி அஞ்சலி

லண்டன்: அஞ்சலி செலுத்திய இந்திய ஜனாதிபதி... பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடலுக்கு, இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.

ராணியின் இறுதி சடங்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் நாளை(செப்.,19) நடக்கிறது. அதன்பின், லண்டனுக்கு வெளியே விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் அரசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, இந்திய அரசின் சார்பில், நேற்று(செப்.,17) இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.