அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போர், கொரோனா வைரஸ் என அமெரிக்கா -சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க-சீன மோதல் உச்சத்தை அடைந்தது. மேலும், கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இந்நிலையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததால், டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், டுவிட்டர், ஒரகல் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவாத்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் செயலியின் பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க அரசியல், வர்த்தக துறைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.