போலிவியாவில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றபோது, எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

பொதுமக்களுடன் ராணுவமும் போராட்டத்தில் கலந்து கொண்டது. இதனால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவர் மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.

ஆகஸ்ட் 2ந் தேதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பின் இதுகுறித்து அந்நாட்டு தேர்தல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் போலிவியாவில் தற்போது கொரோனா அதிகளவில் பரவி வருவதால், அங்கு இதுவரை 64 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிபர் தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பரில் நடைபெறவிருந்த போலிவிய அதிபர் தேர்தலை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது, நவம்பர் 29 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.