பிசிஆர் பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை

நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவு... அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்குள் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்புக்கு அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளை பின்பற்றுதல் மக்கள் மத்தியில் குறைவடைந்ததே நோய் தொற்றியதற்கான அடிப்படை காரணமாகும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசார நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சாதாரணமாக கொவிட் நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவனங்களிலும் தெரிவின் அடிப்படையில் PCR பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விசேடமாக குழுக்கள் அடிப்படையில் அதிகமானோர் தொழில் புரியக்கூடிய நிறுவனங்களில் PCR பரிசோதனையை தெரிவின் அடிப்படையில் அடிக்கடி நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தொழிற்சாலையில் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரிய வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.