செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பிரதமர் மோடி தேசிய கொடியேற்றியபோது வானில் ஹெ லிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. தொடர்ந்து அவர் சுதந்திரதின உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பெருமையை தேடி தந்துள்ளது. வெளி நாட்டு பொருட்கள் ,பொம்மைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பிறரை சார்ந்திருக்காமல் வாழ வேண்டும்.

பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலும். டிஜிட்டல் இந்தியா ,ஸ்டார்ட் அப் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது. ஊழலுக்கு எதிரான எண்ணம் வர வேண்டும். நாட்டை கொள்ள அடித்தவர்கள் தக்க தண்டனை பெற்றே தீர வேண்டும்.

அதில் எந்தவொரு பெரிய நபரும் தப்பிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான போரில் மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்ப அரசியல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இது தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.