கடந்த காலங்களில் இனவெளியை எதிர்கொண்டதாக பிரதமர் ரிஷி சுனக் தகவல்

பிரிட்டன்: கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் ராணி கமிலாவின் ஏற்பாட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் இளவரசர் வில்லியமின் ஞானத்தாயும், மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளருமான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகளை கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதை தொடர்ந்து, அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார். இந்நிலையில் லண்டனில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்கிடம் இந்த இனவெறி பிரச்சினை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் அதற்கு பதிலளிக்கையில், அரச அரண்மனை தொடர்பான விஷயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார் என்றார்.