கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை; கொரோனா சிகிச்சை அனுமதி ரத்தானது

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா நோயாளியிடம் 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு, 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்த கீழ்பாக்கம் Be Well தனியார் மருத்துவமனையின், அனுமதியை ரத்து செய்து மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் கொரோனா நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு, 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்தது உறுதியானது. கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் வழங்கப்படாததும் தெரிய வந்தது.

இதையடுத்து Be Well மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.