பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் கொரோனா பரவல் விகிதம் குறையும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரை 131 நாடுகளில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து, மாதிரி ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வு முடிவுகளை ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் நாயர் கூறுகையில், கொரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவடிக்கைகளாக பள்ளிகள், பணியிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால், 28 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும் என்று கூறினார்.

மேலும் அவர், சில நாடுகளில் கொரோனா 2-வது அலை பரவல் நடப்பதை பார்த்துள்ளோம். அதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த்துள்ளோம். பள்ளிகளை திறந்ததால், சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்ததை கவனித்துள்ளோம் என தெரிவித்தார்.

எனவே, பள்ளிகளை திறக்கும்போது, கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஹரிஷ் நாயர் தெரிவித்துள்ளார்.