ஜப்பான் அரசு நிதியுதவியில் வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ்கள் வழங்கல்

கொழும்பு: அன்பளிப்பாக வழங்கப்பட்டன... ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ச்சியாக மூளாய் வைத்தியச்லையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில் தனது வருகையின் ஞாபகார்த்தமாக மரமொன்றினையும் வைத்தியசாலை வளாகத்தில் நாட்டி வைத்தார்.

இதன்பொழுது ஜப்பான் தூதுவர் மிசுகொசி , தூதுவராலய அதிகாரிகள், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையினர்,பணியாளர்கள், சங்கானை பிரதேச செயலர் , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி கூட்டுறவு ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.