கர்நாடகத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி

கர்நாடகா: கர்நாடகாவிற்கு பயணம்... சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்துக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார்.

கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக கர்நாடகத்துக்குச் செல்கிறார். கட்சி வட்டாரங்களின் தகவல்படி, ராகுல் காந்தி காலை பெங்களூருவுக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோலார் பகுதிக்கு செல்ல உள்ளார்.

அங்கு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஜெய் பாரத் என்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்துப் பேசினார். இதனையடுத்து, அவர் மீது மோடி சமூகத்தினரை அவமதித்து விட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு, குஜராத் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று கோலார் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேச உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கோலார் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.