மழை, வெள்ளத்தில் சிக்கி விலங்குகள் பலி... அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 காண்டாமிருகங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலமான அசாம், கொரோனா மற்றும் கனமழை வெள்ளம் என்ற 2 பேரிடர்களில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக அம்மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அங்குள்ள பிரம்மபுத்ரா உள்ளிட்ட 8 ஆறுகளில் ஆபத்து கட்டத்தையும் தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.
இதனால் அங்குள்ள ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 79 பேர் உயிரிழந்ததோடு 50 லட்சத்துக்கும்
அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள காசிரங்கா
தேசிய வனவிலங்குகள் பூங்காவில் மழை வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்பை
சந்தித்து வருகிறது.
தொடர்மழையால் பூங்காவின் கிட்டத்தட்ட 85%
பரப்பளவு, அதாவது 430 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு தற்போது முற்றிலும்
நீரில் மூழ்கியுள்ளது. பூங்காவில் உள்ள 223 வன முகாம்களில் 43 முகாம்கள்
நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 36 வராக மான்கள், 9 காண்டாமிருகங்கள், 3
காட்டு எருமை, ஒரு மலைப்பாம்பு, 7 காட்டுப்பன்றி, 2 சதுப்பு மான்கள், ஒரு
சாம்பார் மான் மற்றும் இரண்டு முள்ளம்பன்றிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளன.
பூங்காவிற்கு
அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதியதில் 15 வராக மான்
உயிரிழந்துள்ளன. மேலும் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள வனவிலங்கு
மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் மீட்கப்பட்ட 15 விலங்குகளும்
இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 51 விலங்குகள்
காயமடைந்தன, இன்று வரை, 134 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
அவைகளில்
110 விலங்குகள் காட்டுக்குள் மீண்டும் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு
வயது பெண் காண்டாமிருகம் உட்பட 8 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒற்றைக் கொம்பு
காண்டாமிருகங்களின் மிகப்பெரிய வாழ்விடமான காசிரங்காவில் வெள்ளம் என்பது
வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பூங்காவில் சுமார் 2,400
காண்டாமிருகங்கள் மற்றும் 121 புலிகள் உள்ளன. கடந்த ஆண்டு, வெள்ளத்தில்
பூங்காவில் 18 காண்டாமிருகங்கள் உட்பட சுமார் 200 விலங்குகள் உயிரிழந்தது
குறிப்பிடத்தக்கது.