நீதிமன்ற தடையையும் மீறி மட்டக்களப்பில் பேரணி

தடையை மீறி நடந்த போராட்டம்... மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி, பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாபெரும் பேரணிக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கல்லடிப் பாலத்திற்கு அருகில் குறித்த பேரணியில் கலந்து கொள்ளச்சென்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் அச்சுறுத்தல்களை விடுத்தனர். நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

மேலும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்கு வந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. கலகம் அடக்கும் பொலிஸாரும் பெருமளவான பொலிஸாரும் கல்லடி பாலத்திற்கு அருகில் குவிக்கப்பட்டு இருந்ததுடன் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் குறித்த தேவாலயப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதன்போது, தேவாலய வாசல்கதவுகளை மூடப்பட்டதுடன் பேரணி செல்லாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்குவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் எனத் தெரிவித்தார்.

பல இடங்களில் பேரணியை பொலிஸார் தடுக்கமுற்பட்டபோதும் கலகமடக்கும் பொலிஸாரைக் கொண்டும் பேரணியை தடுக்க முற்பட்டபோது பேரணி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மேலும், மட்டக்களப்பு பிரதான வீதி, புகையிரத வீதியுடாகச் சென்று தாண்டவன்வெளி சந்தி ஊடாக சென்று திருமலை வீதியுடாக காந்திபூங்கா வரை பேரணி சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளையும் கொரோனாவினையும் காரணம் காட்டி தமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கவனயீர்ப்புப் பேரணியில் இரா.சாணக்கியனுடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.