மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர் தேர்வு குறித்து ஆளுநருக்கு பரிந்துரை

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்தது. இதற்காக இருவரை தேர்வு செய்து அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இரு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் அறையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கூட்டத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்றார். மனித உரிமைகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜ இளங்கோ, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமிக்க கூட்டத்தில் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பங்கேற்க வேண்டும். ஆனால், அவர் பங்கேற்கவில்லை.