வவுனியா பகுதியில் கிணற்றில் வெடி பொருட்கள் மீட்பு

வெடி பொருட்கள் மீட்பு... வவுனியா- வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில், கிணறொன்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு செய்துள்ளார். இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை முதற்கட்டமாக மீட்டிருந்தனர்.

குறித்த கிணற்றில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நீதிமன்றின் அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.