சரியான முறையில் நிவாரண முகாம்களை திறக்கவில்லை - தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் தற்போது கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மத்தியில் பலரும் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளம் காரணமாக பயிர்கள் அழிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. சரியான முறையில் நிவாரண முகாம்களை திறக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ஆளும் பா.ஜனதாவினர் இடைத்தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் விடும் சாபம் உங்களை வந்து சேரும் முன்பு, ஆட்சியை நடத்தும் பா.ஜனதாவினர் விழிப்படைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம் கூறியுள்ளார். ஆனால் கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. இது பிரதமரின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள், மக்களுக்கு உதவ முன்வரவில்லை என தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.