முதுமலை புலிகள் காப்பகத்தை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீலகிரிக்கு வர இ-பாஸ் பெறும் நடைமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் வனத்துக்குள் சென்று வனவிலங்குகளை பார்வையிடுதல், யானை சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள் நடைபெறவில்லை. அவை அனைத்தும் முடங்கி கிடக்கிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை திறந்து பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலிகள் காப்பகம் பல மாதங்களாக மூடி கிடப்பதால் அடர்ந்த வனம் மற்றும் வனவிலங்குகளை காண்பதற்கும், வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கவும் முடியாமல் உள்ளது. எனவே புலிகள் காப்பகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக புலிகள் காப்பகத்தை திறப்பது குறித்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அதற்கான உத்தரவு வரவில்லை என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.