பிச்சை எடுக்க பயன்படுத்திய 10 குழந்தைகள் மீட்பு

சென்னையில் சாலையோரங்களிலும், போக்குவரத்து சிக்னல் அருகிலும் குழந்தைகளை பயன்படுத்தி சில பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள். இவ்வாறு பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் குழந்தைகளை மீட்டு அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வதற்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படை போலீசார், சென்னையில் சமீபத்தில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 13 குழந்தைகளை மீட்டு உரிய நல்வாழ்வு மையங்களில் ஒப்படைத்தனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கபாலீசுவரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் முன்பாகவும், சாலையோர சிக்னல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பிச்சை எடுக்க பயன்படுத்திய பத்து குழந்தைகளை மீட்டு உரிய நல்வாழ்வு மையங்களில் ஒப்படைத்தனர். மேலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.