உயர்ந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 11 ஆயிரத்து 361 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 95.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 96.15 அடியாக உயர்ந்தது. இன்று மேலும் உயர்ந்து 96.73 அடியானது.