மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக் கொலை

உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள பிரபல ரவுடி விகாஸ் துபே மீது 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புள்ளது. இந்நிலையில் விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றிருந்தபோது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், 8 போலீசார் உயிரிழந்தனர். மேலும், போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர்.

அதன்பின் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின் போலீசார் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேரை அடுத்தடுத்து சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே போலீசிடம் சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததன் போரில் அவனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணைக்கு பின், உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு விகாஸ் துபேவை கொண்டு வந்தபோது, அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது போலீசார் வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான் இதனால் போலீசார் அவனை சுட்டுப் பிடித்தனர். பலத்த காயமடைந்த விகாஸ் துபே சற்று நேரத்திலே உயிரிழந்தான்.