புத்தாண்டு கொண்டாட்டங்களில் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

சென்னை: விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்... புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. முக கவசம் அணிவது, பொது இடங்களில் தனி இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் கடந்த 2021, 22-ம்ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் சென்றதால்,2023-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, ஓமிக்ரானில் இருந்து உருவான பிஎப்7 கொரோனா வைரஸ், சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் காரணமாக 2023 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், “புத்தாண்டு, மத விழாக்கள், அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் தடை இல்லை. அதே நேரத்தில் அனைவரும் சுயகட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிந்து தனிப்பட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், தனிப்பட்ட தூரத்தை கடைப்பிடிப்பதும் இன்னும் கொரோனா விதிமுறைகளில் உள்ளது. அதற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, எந்த நிகழ்வாக இருந்தாலும், மக்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.