வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் ஆழ்ந்த இரங்கல்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களான டெல்லி, அசாம், பீகார், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள 75 சதவீதத்திற்கும் மேலான மாவட்டங்கள் இந்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. பீகாரிலும் வெள்ளச் சேதம் அதிகமாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ரஷிய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரிடம் கனமழையால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கவலையை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வருத்தத்தை ரஷ்யா பகிர்ந்து கொள்கிறது, மேலும் காயமடைந்த அனைவரையும் விரைவாக குணமடைவார்கள் என்று நம்புவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.