பிரச்னைக்கு சமாதானம் செய்து வைத்த சேலம் கலெக்டர்

போனில் மிரட்டிய விவகாரத்தில், மாவட்ட அதிகாரி, சங்க மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் அழைத்து, சமரசம் செய்து கலெக்டர் ராமன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி (53). இவரது அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் இலக்கியா (35) அலுவல் கோப்புகளை தாமதமாக தாக்கல் செய்வதாக கூறி, அவரை சக ஊழியர்கள் மத்தியில், ஒருமையில் பேசி, சாந்தி கண்டித்துள்ளார்.

அதில், மனவேதனையடைந்த இலக்கியா, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலர் அர்த்தனாரியிடம் முறையிட்டுள்ளார். அதனால் அவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சாந்தியை எச்சரித்துள்ளார். அதில், நிலைகுலைந்து போன அவர், பதிவான மிரட்டல் பேச்சை, சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.

அதை கேட்ட சங்கங்கள், அமைப்புகள் அவருக்கு ஆதரவாக கடும் எதிர்ப்பை பதிவு செய்த அதே நேரத்தில், பிரச்னை, திசை திரும்பும் சூழல் உருவானது.

இதுகுறித்து, கலெக்டர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து இருவரும் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. நடந்த சம்பவங்களை இருவரும் கூறி தன்னிலை விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து கலெக்டர் ராமன், தவறு இரு தரப்பிலும் உள்ளதால், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். எனவே மனம் திருந்தி சமாதானமாக போங்கள் என அறிவுரை வழங்கினார். அதையேற்று, அவர்கள் ஒருவருக்கொருவர், வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர். பின், வணக்கம் தெரிவித்து, நட்பு பாராட்டியதால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ராமன் கூறுகையில், ''சங்க நிர்வாகிகள், நடந்த சம்பவத்தை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ள வேண்டும். அத்துமீறி பேசக்கூடாது. அதிகாரிகளும், வரம்பு மீறக்கூடாது,'' என்றார்.