உத்தவ் தாக்கரேயை சந்தித்து புயல் சேத நிவாரணம் குறித்து விவாதித்த சரத்பவார்

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த சிவசேனா கூட்டணி அரசில் அங்கமாக உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிசர்கா புயல் பாதித்த ராய்காட் மற்றும் ரத்னகிரி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஏற்பட்ட புயல் சேதத்தை பார்வையிட்டார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மாநில அரசு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று சரத்பவார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை மும்பை மேயர் பங்களாவில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து ராய்காட் எம்.பி. சுனித் தத்காரே கூறுகையில், ராய்காட் மற்றும் கொங்கன் சுற்றுப்பயணம் குறித்து சரத்பவார் விளக்கம் அளித்ததாகவும், நிசர்கா புயலால் தோட்டக்கலை மற்றும் மீன்வளத்துறைகளுக்கு ஏற்பட்டு உள்ள சேதங்கள் பற்றி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை குறித்து முதல்-மந்திரியிடம் விளக்கம் அளித்ததாக சுனித் தத்காரே தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கொள்கை முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும் என சரத்பவார் பரிந்துரைத்தாக கூறினார்.

ஏற்கனவே நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட்டுக்கு ரூ.100 கோடியும், ரத்னகிரிக்கு ரூ.75 கோடியும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். தற்போது நிசர்கா புயல் சேத நிவாரணம் குறித்து சரத்பவார் விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.