சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வழக்குப்பதிவு செய்தது. பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட முத்துராஜ் தலைமறைவாக உள்ளார். எனவே காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி ஜஜி சங்கர் அறிவித்துள்ளார். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் உள்பட நான்கு பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை என்றும் ஜஜி சங்கர் தெரிவித்தார்.