நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடக்கம்

கல்வி அமைச்சு தகவல்... கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் நாளை முதல் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கமைய, தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.